Recent Posts

தமிழ்ச் சமூகத்தின் தாயகத்தில் நீதியும் ஆற்றுதலும் கிடைக்க வேண்டும் என்பதற்கான தேடல்: – ஜோன் ரொறி

ரொறொன்ரோ மேயர் ஜோன்ரோறி அவர்கள் கடந்த மார்ச் மாதம் நடுப்பகுதியிலே இலங்கையின் வடமாகாணத்திற்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார். அங்கு சென்ற மேயர் ரொறன்ரோ நகரத்திலுள்ள தமிழ்ச் சமூகம் எங்கேயிருந்து வந்தார்கள்? ஏன் நாட்டைவிட்டு வெளியேறினார்கள்? என்ற விபரங்களைத் தெரிந்து கொள்வதுடன் இலங்கையில்; நீதிக்கும் அமைதிக்குமான வழிவகைகள் எவ்வாறு உள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்வதிலும் ஆர்வமாக இருந்தார்.

இப்பயணம் தொடர்பாக மேயர் ஜோன்ரோறி அவர்கள் எழுதிய அனுபவப் பகிர்வின் தமிழாக்கத்தை இங்கு தருகின்றோம்: “ரொறொன்ரோவில் வாழுகின்ற தமிழ்ச்சமூகத்தினரை நன்கு தெரிந்தவர்கள் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை அறிந்திருப்பர். தமிழர்கள் தொழில் முனைப்புக் கொண்டு வெற்றிகரகமாகச் செயற்படுபவர்கள்> நல்ல குடிமக்கள்> சிறந்த அயலவர்கள்> நல்ல நண்பர்கள் என்பதைப் பலரும் அறிவார்கள். தமிழர்களுடைய தாய்நாட்டைப் பற்றி உங்களுக்குப் பெருமளவில் தெரியாமல் இருக்கலாம்> இலங்கையில் இருந்து வந்த தமிழர்களே பெரும்பாலும் ரொறன்ரோவில் வசிக்கிறார்கள்.

இலங்கையிலே நடைபெற்ற நீண்ட துன்பியலான உள்நாட்டு யுத்தத்திலிருந்து தப்பித்துக்கொள்ள அல்லது அதிலிருந்து விலகிக்கொள்வதற்காக நாட்டைவிட்டு இங்கு வந்தவர்களே இத்தமிழர்கள். இந்த யுத்தமானது பல தசாப்தங்களாக நடைபெற்ற பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒன்றாகும். இத்தகைய சூழலிற்தான் அண்மையிலே நான் ரொறொன்ரோ நகரத்தின் முதலாவதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்க் கனடியரான நீதன் சண்> மைக்கல் தொம்சன் ஆகிய நகரசபை உறுப்பினர்களுடன் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன்.

பத்து வருடங்களுக்கு முன்பு நான் சிறிலங்காவிற்குச் சென்றிருந்தேன். ஆனால் அந்த அழகான நாட்டின் வடபகுதிக்குச் செல்வதற்கு என்னால் முடியவில்லை. அந்த நேரத்தில் அங்கு போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததனால் என் வடபகுதிக்கான பயணம் தடைசெய்யப்பட்டது.

யுத்தச் செயற்பாடுகள் சில வருடங்களிற்கு முன்னர் முடிவுற்றிருக்கும் நிலையில் நான் வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள சமூகங்களையும் சந்தித்து தமிழ் மக்களுக்கான நீதியும் மன ஆற்றுகையும் அடையப்பெறுவதற்காக என்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்ற விபரமான விளக்கத்துடன் திரும்பி வந்துள்ளேன்.

வடபகுதிக்குச் செல்லும்போது உங்களுக்குத் தென்படக்கூடிய முதலாவது விடயம் யாதெனில் மிகையாகக் காணப்படுகின்ற இராணுவத்தின் பிரசன்னமே.

ஒரு சனநாயக நாட்டில் மக்கள் வாழும் பகுதியில் எதிர்பார்பதைவிட பெருமளவில் இராணுவமயமாக்கப்பட்ட தன்மையே அங்கு காணப்படுகின்றது. பெருமளவு இராணுவத்தளங்கள் குறிப்பிட்ட மைற்கற்களுக்கிடையே அமைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் மூன்று தமிழ் குடிமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற அடிப்படையில் அங்கே இராணுவப்படை இருப்பதாகவும் தமிழ் மக்களிடமிருந்து வற்புறுத்திப் பறிக்கப்பட்ட நிலங்களில்தான் இப்படைகள் குடிகொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

மக்களுக்குச் சொந்தமான நிலங்களை தமது தேவைகளுக்காக இராணுவம் பயன்படுத்துவதும் மக்கள் மூச்சுவிடத் திணறுகின்ற அளவுக்கு இராணுவத்தின் நடமாட்டமும் இணைந்ததான இந்தச் செயற்பாடே இலங்கையின் வடபகுதியில் உள்ள மக்களின் நிம்மதி மிக்க வாழ்வுக்கு பலத்த அச்சுறுத்தலாக இருக்கின்றது.

நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது தமிழர் பறிகொடுத்த தமது உறவுகளை நினைவு கொள்வதற்கு எந்தவிதமான நினைவுச்சிலைகளோ நினைவிடமோ வடமாகாணத்தில் இல்லை. இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற இடமான முள்ளிவாய்க்காலிலே தமிழர் ஒரு தற்காலிக நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தி உள்ளனர். இறுதிக்கட்டதின் போது நாற்பதினாயிரம் (40>000) உயிர்கள் இழக்கப்பட்டதாக ஐக்கியநாடுகள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த நினைவிடத்திலே ஒரு சுடரை ஏற்றி மலர்கள் இட்டு ஒரு கணம் அந்த நினைவை மீட்டியது என் மனதை நெகிழச் செய்வதாக இருந்தது.

நான் அங்கிருந்த வேளையில் அமைதியான வழியில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அதில் குறிப்பிட்ட ஒரு எதிர்ப்புப்பேரணியிலே நடுத்தர வயதுள்ள பெண்கள் ஒரு குழுவாகக் காணப்பட்டனர். அவர்கள் இளம் ஆண்களின் படங்களைத் தாங்கிய வண்ணம் சோகம் நிறைந்திருந்தனர். அது எனது மனதை மிகவும் தொட்டதாக இருந்தது.

இந்தப்படங்கள் அவர்களின் மகன்மார் பேரன்மார்களுடையது என்பதனை நான் அவர்களுடன் பேசியபோது உணர்ந்துகொண்டேன். அவர்கள் கடைசிக் கட்டப்போரின்போது பிடித்துச் செல்லப்பட்டதாகப் பலருக்கும் தெரியவந்துள்ளது. ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை காணாமல் போன இந்த ஆண்கள் பற்றி ஏதாவது செய்தி கேள்விப்பட்டதாகவோ அல்லது அவர்களைக் கண்டதாகவோ இதுவரை எதுவும் இல்லை.

இதைச் சிந்தித்துப் பாருங்கள். உங்களது பிள்ளைகள் சில வருடங்களுக்கு முன்பு சுற்றிவளைக்கப்பட்டுக் கொண்டு செல்லப்பட்ட பின்பு  இப்பிள்ளைகளின் கதி என்னவாயிற்று என்பது பற்றி ஏதும் அறிய முடியவில்லை என்றால் எத்தகைய துயரம் எமக்குண்டாகும்?

இது தொடர்பாக அண்மையில் அரசாங்கம் சில முயற்சிகளை எடுத்திருந்தும் எல்லாமே பெருமளவில் மூடி மறைக்கப்படும் மர்மமாகவே தொடர்ந்தும் காணப்படுகிறது. தங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து தங்களை விட அரசாங்கத்திற்கு அதிகம் தெரிந்திருக்கக்கூடிய நிலையில் இருக்கும் தாய்மார்களை அவர்களின் நிலையிலிருந்து எண்ணிப்பாருங்கள். ஒரு தாத்தாவாக, அப்பாவாக என்னை உணர்ந்து அவர்களின் வேதனையைக் அந்தக் கண்களில் கண்டேன். அவர்களின் துயரத்தை ஆழமாக விளங்கிக்கொண்டேன்.

செய்திகள் கெட்டவையாக இருப்பினும் கூட  மனம் புண்பட்டிருக்கும் இந்தத் தாய்மாருக்கும் ஒரு முடிவு தேவை. இதனைப் பகிரங்கப்படுத்த வேண்டும். இந்தக் காணாமற்போன பிள்ளைகள் பற்றி அரசாங்கத்திடம் உள்ள பழைய அறிக்கைகளை வெளியிடுவது, ஒரு நல்ல தொடக்கமாக அமையும்.

வடமாகாண முதலமைச்சர் கூறுவது போன்று உண்மையிலே ஒரு சுதந்திரமான, பொறுப்புக்கூறும் பொறிமுறை ஒன்றிலே சர்வதேச சமூகம் பங்கு கொள்ளும்போதுதான் மனித உரிமை அத்து மீறல்கள்  காணாமற் போனோர், இறந்தோர் பற்றிய உண்மையான நீதியை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும் எனபதுதான் நியாயமானதாக அமையும்.

இப்பொறுப்புக்கூறும் படிமுறையை அமைக்கும் போது சர்வதேச ரீதியில் மதிக்கக்கூடிய நீதியாளர்களை அனுமதிக்கின்ற செயலே பயனுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தவும் உண்மையான மாற்றத்தை நிகழ்த்தவும் அமைதியினைக் கொண்டுவரவும்; வல்ல நம்பிக்கையினை அளிப்பதாக அமையும்.

பொருளாதார சமூக முதலீட்டிற்கான ஒரு திட்டம் இப்பிரதேசத்திற்குப் பெருமளவில் தேவைப்படுவதாக உள்ளது. உலகிலுள்ள பெரும்பாலான இடங்கள் போன்று முன்னேறுவதற்கான வழிகளையும் வேலை வாய்ப்புகளையும் தமிழர்கள் அடைவது என்பது தமிழ் மக்களுக்கான சமூக நீதியை அவர்கள் அடைவதற்கும் வழி வகுக்கும்.

இதற்குரிய தொடக்கத்திற்கான முனைப்பு கூடுதலாகச் சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தே வரவேண்டும். இருந்தும் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் ரொறொன்ரொ நகரத்திற்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் நாம் கையெழுதிட்டுள்ளோம் என்பதனை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். இதன் மூலம் கல்வியிற் தொடங்கி பொருளாதார அபிவிருத்தி போன்ற எல்லா விடயங்களிலும் ஒருமித்துச் செயற்பட முடியும்.

இந்த உடன்படிக்கை போரின்போது அழிக்கப்பட்ட சரித்திர ரீதியான நூலகத்திற்கு உதவுவதையும் உள்ளிட்டதாக அமையும். இப்புரிந்துணர்வு அறிக்கையின் அடிப்படையில் நல்லெண்ணத்தினையும் கூட்டு ஒத்துழைப்பினையும் வெளிக்காட்டும் ஒரு அடையாளக் குறியீடாக ரொறொன்ரொ பொது நூலகத்திலிருந்து சில புத்தகங்களை எடுத்துச் சென்று யாழ். பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்துள்ளோம்.

சிறிலங்காவின் வடபகுதிக்கு பயணம் செய்த அனுபவம் என்பது மாறுபட்டதாக இருந்தது.

மனக்கலக்கத்தை அனுபவித்த மக்களைச் சந்தித்ததன் மூலம் எமது மனம் நெகிழ்வுற்றது. இம்மக்கள் அரசாங்கத்தினால் இதுவரை போதுமான அளவு நீதியையும் உண்மையான மன ஆறுதலை ஏற்படுத்தும் வகையில் எந்த நடவடிக்கையையும் பெறவில்லை. பல வருடங்களாக முன்னைய அரசாங்கங்களால் மறுக்கப்பட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைக்க தற்போதைய அரசாங்கம் குறைந்த அளவில் சில சிறிய படிகளை எடுத்திருப்பதன் மூலம் ஒரு நம்பிக்கைக்கான அறிகுறி தென்படுகின்றது.

தற்போதுள்ள சவால் என்பது அடுத்த கட்டமாக பெரிய படிகளை அரசாங்கம் எடுப்பது என்பதாகும். காணாமற்போன பிள்ளைகள் பற்றிய தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் தேவையும் உரிமையும் இத்தாய்மாருக்கு இருப்பதால் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும். அளவுக்கதிமான இராணுவப் பிரசன்னத்தைக் குறைக்க வேண்டும்.

காணிச் சொந்தக்காரர்களிடம் பெருமளவிலான காணியைத் திரும்பவும் கொடுத்தல்  சர்வதேச பங்களார்களின் ஈடுபாட்டுடன் என்ன நடைபெற்றது என்பதனை அறிந்து கொள்ள ஒரு பொறுப்புக்கூறும் படிமுறையை அமைத்தல்  இப்பிரதேசத்தினதும் தமிழ் மக்களிற்கும் நம்பிக்கை உணர்வினையும் சந்தர்ப்பத்தினையும் பெற்றுக்கொள்ளவும் உதவி செய்யும் பொருட்டு ஒரு உண்மையான திட்டத்தினை உருவாக்குதல் போன்றவற்றை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.

இங்கே ரொறொன்ரோவில் உள்ள சமூகத்துடன் இணைந்து இவ்விடயங்கள் சாத்தியமாகும் பொருட்டு பணியாற்றுவதற்காக நான் காத்திருக்கின்றேன்.
Share:
← Newer Post Older Post → Home

Popular Posts

Blog Archive

Search This Blog

Powered by Blogger.

Blog Archive